அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
(01) விளக்கம்:
அகர (அ) ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதல்; அதுபோல, ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கிறான்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
(02) விளக்கம்:
தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றனால் உண்டான பயன் யாதுமில்லை.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
(03) விளக்கம்:
அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
(04) விளக்கம்:
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
(05) விளக்கம்:
இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இரு வகை வினைகளும் வந்து சேரா.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
(06) விளக்கம்:
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
(07) விளக்கம்:
தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
(08) விளக்கம்:
அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
(09) விளக்கம்:
எண்வகைக் குணங்களின் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
(10) விளக்கம்:
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
(11) விளக்கம்:
மழை பெய்வதனாலேயே உலக உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
(12) விளக்கம்:
உண்பவர்களுக்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
(13) விளக்கம்:
மழை காலத்தில் பெய்யாது பொய்க்குமானால் கடலால் சூழப்பெற்ற இப் பரந்த உலகில் பசி நிலைத்து நின்று உயிர்களை வாட்டும்.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
(14) விளக்கம்:
மழை என்னும் வருவாயின் வளம் குறைந்தால், பயிர் செய்யும் உழவரும் ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
(15) விளக்கம்:
காலத்தில் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை. அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது.
(16) விளக்கம்:
வானிலிருந்து மழைத்துளி வீழ்வது நின்றுவிட்டால், உலகில் பசும்புல்லின் தலையைக் காண்பதுகூட அரிதாகிவிடும்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
(17) விளக்கம்:
மேகமானது கடல்நீரை முகந்து சென்று மீண்டும் மழையாகப் பெய்யவிட்டால், அப்பெரிய கடலும் தன் அளவில் குறைந்து போகும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
(18) விளக்கம்:
மழை முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்தில் வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறாது.
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
(19) விளக்கம்:
மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்தில் பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டும் நிலையாமற் போய்விடும்.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்நின்று அமையாது ஒழுக்கு.
(20) விளக்கம்:
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
(21) விளக்கம்:
வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து, ஆசையைத் துறந்தவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் சிறப்பாகும்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கோண் டற்று.
(22) விளக்கம்:
உலகப் பற்றுக்களை விட்டொழித்தவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுப்பது போலதாகும்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
(23) விளக்கம்:
இப்பிறவி, மறுபிறவி என்னும் இரண்டின் கூறுகளையும் தெரிந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டு வாழ்பவர்களின் பெருமையே உயர்ந்ததாகும்.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
(24) விளக்கம்:
அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிற யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேன்மையான சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவன்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
(25) விளக்கம்:
ஐம்புலன்கள் மூலமாக எழுகின்ற ஆசைகளை தவிர்த்தவனுடைய வலிமைக்கு, அகன்ற வானுலகின் தலைவனான இந்திரனே போதிய சான்று ஆவான்.
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
(26) விளக்கம்:
செய்வதற்கு அரியதாக உள்ள செயலை செய்து முடிப்பவரே பெரியவர். அப்படிச் செய்ய இயலாதவர் சிறியவர்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
(27) விளக்கம்:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
(28) விளக்கம்:
நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
(29) விளக்கம்:
நல்ல குணம் என்கிற குன்றின்மேல் ஏறிநின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணம் கூட வைத்துக கொள்ள முடியாது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.
(30) விளக்கம்:
எல்லா வகையான உயிருக்கும் செம்மையான அருளை மேற்கொண்டு நடப்பதானால், அந்தணர் எனப்படுவோர் அறவோர் என்றழைக்கப்படுகிறார்.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்துனூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
(31) விளக்கம்:
அறமானது சிறப்பைத் தரும். செல்வத்தையும் தரும். ஆகையால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவுமில்லை என்கிறார் வள்ளுவர்.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
(32) விளக்கம்:
அறநெறியொடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை. அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
(33) விளக்கம்:
நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக் கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயலை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
(34) விளக்கம்:
தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; மற்றவையெல்லாம் வெறும் ஆரவாரத் தன்மை கொண்டவை
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
(35) விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
(36) விளக்கம்:
'பின் காலத்தில் பார்ப்போம்' என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத் துணையாகும்.
அறத்தாறு இதுவென வேண்டா சிலிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
(37) விளக்கம்:
சிவிகையை (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் செல்பவன் ஆகியோரிடையே , 'அறத்தின் வழி இதுதான்' என்று கூறவேண்டாம்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
(38) விளக்கம்:
செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
(39) விளக்கம்:
அற வாழ்வில் வாழ்வதானால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
(40) விளக்கம்:
ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறமே. அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
(41) விளக்கம்:
இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
(42) விளக்கம்:
துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
(43) விளக்கம்:
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
(44) விளக்கம்:
பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்து கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதனால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
(45) விளக்கம்:
கணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப் படி நிகழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.
(46) விளக்கம்:
அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்திவருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
(47) விளக்கம்:
அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே, வாழ்வு முயற்சியில் ஈடுபடுபவர்களுள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
(48) விளக்கம்:
பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவம் செய்பவர்களின் நோன்பைவிட வலிமையானது ஆகும்.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
(49) விளக்கம்:
இல்லற வாழ்க்கையே சிறந்த அறம் என்று சான்றோர் கூறுகின்றனர். அதிலும் பிறரைப் பழித்துப் பேசாமல் இருப்பது இன்னும் சிறப்பாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
(50) விளக்கம்:
உலக நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
(51) விளக்கம்:
இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவி ஆவாள்.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
(52) விளக்கம்:
இல்லற வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்லற வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது நல்ல வாழ்வு ஆகாது.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
(53) விளக்கம்:
மனைவி சிறந்தவளாக இருந்தால் ஒருவனுக்கு எல்லாம் கிடைத்ததாகப் பொருள். அதேசமயம், மனைவி சரியில்லாதவளாக இருந்தால் அவனுக்கு எந்தச் சிறப்பு கிடைத்து என்ன பயன்?
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுடன் டாகப் பெறின்.
(54) விளக்கம்:
கற்பு என்னும் மன உறுதி மனைவியிடம் இருந்தால், அந்தப் பெண்ணைவிடப் பெருமைமிக்க ஒன்றை உலகில் காண முடியாது.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
(55) விளக்கம்:
காலை எழுந்ததும் தெய்வத்தைத் தொழுவதை விட தனது கணவனை தொழுது வாழும் பெண்கள், பெய் என்று சொன்னால் சட்டென மழை பெய்யும்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
(56) விளக்கம்:
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணி, தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் இருப்பவளே பெண்.
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
(57) விளக்கம்:
சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர் 'நிறை' என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்.
பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
(58) விளக்கம்:
பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்.
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
(59) விளக்கம்:
புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி அமையாதவர்களுக்கு, இகழ்ச்சியாய் பேசுபவர் முன்னே தலை நிமிர்ந்து ஏறு போல் நடக்கும் பெருமித நடை இருக்காது.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
(60) விளக்கம்:
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம். நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
(61) விளக்கம்:
பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
(62) விளக்கம்:
பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா.
தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
(63) விளக்கம்:
நம்முடைய சொத்து என்று போற்றுவதற்கு உரியவர் நமது குழந்தைகளே ஆவர். மக்களாகிய அவரர்களுடைய சொத்துக்கள், செல்வங்கள், அவரவர் வினைப்பயனால் வந்தடையும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
(64) விளக்கம்:
தம்முடைய குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளால் கிடைக்கும் மிகவும் எளிமையுடைய கூழேயானாலும் கூட, அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
(65) விளக்கம்:
தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உடலுக்கு இன்பமாகும் அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
(66) விளக்கம்:
தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, குழலிசை இனியது, யாழிசை இனியது என்று புகழ்ந்து கூறுவார்கள்.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
(67) விளக்கம்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
(68) விளக்கம்:
தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
(69) விளக்கம்:
தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுறும் தாய், அவனைப் பெற்ற பொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்.
(70) விளக்கம்:
மகன், தந்தைக்குச் செய்யும் உதவி இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
(71) விளக்கம்:
அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
(72) விளக்கம்:
அன்பில்லாத நெஞ்சத்தை உடையவர், எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்.ஆனால் அன்பு உள்ளம் கொண்டவரோ, தம் எலும்பையும் கூடபிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
(73) விளக்கம்:
அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது. அந்த பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
(74) விளக்கம்:
அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கிற அளவற்ற மேன்மையைத் தரும்.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
(75) விளக்கம்:
இவ்வுலகத்தில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
(76) விளக்கம்:
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர். ஆராய்ந்தால் மறச் செய்கைகளுக்கும் அன்பே துணையிருக்கும்.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
(77) விளக்கம்:
எலும்பில்லாத புழுப்பூச்சிகளை, வெயில், காய்ந்து வருத்துவது போல, அன்பிலாதவனை அறமானது காய்ந்து வருத்தச் செய்யும்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
(78) விளக்கம்:
உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்தமரம் தளிர்த்தாற்போல் நிலையற்றதாம்.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
(79) விளக்கம்:
உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு கண்ணுக்குத் தெரியும் உடம்பின் புற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்து உடம்பு.
(80) விளக்கம்:
உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே. அது இல்லாதவர்க்கு எலும்பைத் தோலால் போர்த்திய உடம்பு மட்டுமே ஆகும்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
(81) விளக்கம்:
இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி, உதவுதலின் பொருட்டே ஆகும்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
(82) விளக்கம்:
விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத்தக்கது அன்று.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.
(83) விளக்கம்:
நாள் தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்.
அகனமர்ந்து செய்யான் உறையும் முகனமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல்.
(84) விளக்கம்:
முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உள்மலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்.
வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
(85) விளக்கம்:
விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ?
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
(86) விளக்கம்:
செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர் பார்த்திருப்பவன் , வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
(87) விளக்கம்:
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று: அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும்.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
(88) விளக்கம்:
பொருளை வருத்தத்தோடு காத்து அது போய்விட்ட போது, தாம் பற்றில்லாதவர் என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வி யில் ஈடுபடாதவரே யாவர்.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவர்கண் உண்டு.
(89) விளக்கம்:
பொருள் உடைமையுள்ளும் இல்லாமை என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே: அஃது அறிவற்றவரிடமே உளதாகும்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
(90) விளக்கம்:
அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்: முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
(91) விளக்கம்:
செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய் அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
(92) விளக்கம்:
ணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
(93) விளக்கம்:
முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
(94) விளக்கம்:
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
(95) விளக்கம்:
பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்: பிறவெல்லாம் அணிகலன்கள்ஆகா.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
(96) விளக்கம்:
நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும் சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக , அறம் வளர்ந்து பெருகும்.
நயன்ஈன்று நன்றிபயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
(97) விளக்கம்:
பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒருசிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
(98) விளக்கம்:
சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுபிறவியிலும் இப்பிறவியிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்,
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
(99) விளக்கம்:
இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், கடுமையான சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியருப்பக் காய்கவர்ந் தற்று.
(100) விளக்கம்:
இனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே.
No comments:
Post a Comment