Tuesday, December 4, 2007

திருக்குறள் என்னும் அறிவு அமுதம்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
(301) விளக்கம்:

தனக்குச் சொல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்: செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன?


செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற.
(302) விளக்கம்:

செல்லாத இடத்திலே சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை.

மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
(303) விளக்கம்:

எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீயசெயலை மறப்பதே நல்லது: தீமையான விளைவுகள் அச்சத்தினால் வந்து சேரும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற.
(304) விளக்கம்:

ணிகமலர்ச்சியான நகையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
(305) விளக்கம்:

ஒருவன் தன்னை காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க. காவாதிருந்தால், அச் சினமானது அவனையே ணிடிவில் கொன்றுவிடும்.

சினம்என்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
(306) விளக்கம்:

சேர்ந்தாரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, தன் இனத்தார் என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்து விடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
(307) விளக்கம்:

சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாததுபோல் உறுதியாகும்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
(308) விளக்கம்:

பலமாக கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன்பால் வெகுளாமையே நன்று.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
(309) விளக்கம்:

ஒருவன் உள்ளகத்தாலும் சினத்தைப்பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
(310) விளக்கம்:

அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்கு இணையாவர்.

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(311) விளக்கம்:

சிறப்பை தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்கு துன்பம் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும்.


கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(312) விளக்கம்:

வஞ்சம் கொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
(313) விளக்கம்:

எதுவும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
(314) விளக்கம்:

துன்பம் செய்தவரைத் தண்டித்தல் என்பது, அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும் படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்.

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
(315) விளக்கம்:

பிறிதோர் உயிரின் துன்பத்தை தன் துன்பம் போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன்தான் ஏதும் உளதாகுமோ?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
(316) விளக்கம்:

துன்பம் தருவது எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
(317) விளக்கம்:

எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
(318) விளக்கம்:

தன் உயிர்க்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
(319) விளக்கம்:

முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
(320) விளக்கம்:

துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன. ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவன் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்.
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
(321) விளக்கம்:

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே: கொல்லும் செயல் பிற தீவினைகள் எல்லாம் கொண்டு வரும்.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
(322) விளக்கம்:

உள்ள உணவையும் பலரோடு பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அற நூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது.

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
(323) விளக்கம்:

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்தவுயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்: அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
(324) விளக்கம்:

நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால் எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்ல் என்பதை கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்.

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
(325) விளக்கம்:

வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்.

கொல்லாமை மேற்கொண்டு ஓழுகுவான் வாழ்நாள்மேற்
செல்லாது உயிருணணும் கூற்று.
(326) விளக்கம்:

கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
(327) விளக்கம்:

தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வாதானாலும்கூட, தான் மற்றொன்றினது இனிய. உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக்கூடாது.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
(328) விளக்கம்:

கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோர்க்குக் கொன்றுவரும் ஆக்கம் இழிவானதே யாகும்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.
(329) விளக்கம்:

கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர்.

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
(330) விளக்கம்:

நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியரேயாவர்.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
(331) விளக்கம்:

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்.


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
(332) விளக்கம்:

பெரும்பொருள் வந்தடைதல் கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும். அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
(333) விளக்கம்:

நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்: அதனை ஒருவன் அடைந்தால். அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும்.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.
(334) விளக்கம்:

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(335) விளக்கம்:

நாக்கு உள்ளே இழுத்துக்கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
(336) விளக்கம்:

நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லை என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையதுதான் இந்த உலகம் ஆகும்.

ஒருபொழுதும் வாழ்வவது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
(337) விளக்கம்:

அடுத்த பொழுதில் உயிர் வாழும், வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் அல்ல: அதன் மேலும் அளவற்ற பலவாகும்.

குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
(338) விளக்கம்:

தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
(339) விளக்கம்:

ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு: அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போன்றதே பிறப்பு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
(340) விளக்கம்:

உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து துவங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்.


யாதனின் யாதனின் நீங்கயான் நோதல்
அதனின் அதனின் இலன்.
(341) விளக்கம்:

எந்த எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.


வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
(342) விளக்கம்:

துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்: அப்படி விட்டுவிட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
(343) விளக்கம்:

ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்: அதற்கு வேண்டிய பொருள்களை ஒருசேர விட்டுவிட வேண்டும்.

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
(344) விளக்கம்:

ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும். ஆசை இரூந்தால் அது மீண்டும் உலகபோகத்தில் மயங்கியதே ஆகும்.

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கும் உடம்பும் மிகை.
(345) விளக்கம்:

பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்: ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எதற்காகவோ?

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
(346) விளக்கம்:

உடலை யான் எனவும், பொருள்களை எனது எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
(347) விளக்கம்:

பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக்கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
(348) விளக்கம்:

அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்: மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
(349) விளக்கம்:

பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்துபோகும்: மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(350) விளக்கம்:

பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமேபற்றுக: உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.
பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
(351) விளக்கம்:

உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புகளும் உண்டாகின்றன.


இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
(352) விளக்கம்:

மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு, அவ்வுணர்வு, இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான இன்பத்தையும் கொடுக்கும்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
(353) விளக்கம்:

ஐயத்திலிருந்து நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு, இந்த உலகத்தை விடவும், வானம் மிகவும் அண்மையானதும், உறுதியானதும் ஆகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
(354) விளக்கம்:

மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ளபோதிலும் பயன் யாதும் இல்லை.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(355) விளக்கம்:

எந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
(356) விளக்கம்:

கற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ் வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
(357) விளக்கம்:

என்றும் இருக்கும் மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்துவிட்டால், மீண்டும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
(358) விளக்கம்:

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
(359) விளக்கம்:

எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
(360) விளக்கம்:

காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக்கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
(361) விளக்கம்:

எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, "அவா" என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
(362) விளக்கம்:

ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.
(363) விளக்கம்:

அவாவற்ற தன்மை போலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையான தான செல்வமும் யாதும் இல்லை.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
(364) விளக்கம்:

தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும்; அந்த நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.

அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
(365) விளக்கம்:

பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
(366) விளக்கம்:

ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.
(367) விளக்கம்:

அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்.

அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
(368) விளக்கம்:

அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
(369) விளக்கம்:

அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில் இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
(370) விளக்கம்:

ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும்.


படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
(381) விளக்கம்:

படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான்.


அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
(382) விளக்கம்:

அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.
(383) விளக்கம்:

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்.

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.
(384) விளக்கம்:

அரச நெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டைவிட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
(385) விளக்கம்:

பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு.

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
(386) விளக்கம்:

தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் வுலகு.
(387) விளக்கம்:

இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.
(388) விளக்கம்:

முறைமையோடு ஆட்சிசெய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
(389) விளக்கம்:

சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும்.

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.
(390) விளக்கம்:

கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடிகாத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
(391) விளக்கம்:

கற்பதற்குரிய தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.


எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
(392) விளக்கம்:

எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று கூறப்படுவதுமாகிய இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு கண் எனப்படும்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
(393) விளக்கம்:

"கண்" உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
(394) விளக்கம்:

எல்லோரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, "இனி என்று மீளக் கூடுவோம்" என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
(395) விளக்கம்:

செல்வர்களின் முன்னே உதவிகேட்கும் எளியவர் பணிவோடு நிற்பதுபோல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரே கடையர்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
(396) விளக்கம்:

மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீத் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.

யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
(397) விளக்கம்:

கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
(398) விளக்கம்:

ஒரு பிறவியில் தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்.

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
(399) விளக்கம்:

தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.
(400) விளக்கம்:

"அழிவில்லாத சிறந்த செல்வம்" என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா.

அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்.
(401) விளக்கம்:

நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும்.


கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
(402) விளக்கம்:

கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
(403) விளக்கம்:

கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்.

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
(404) விளக்கம்:

கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
(405) விளக்கம்:

கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர்போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்.

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
(406) விளக்கம்:

"உயிரோடு இருக்கின்றார்" என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர்.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்பாண் புனைபாவை அற்று.
(407) விளக்கம்:

நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
(408) விளக்கம்:

கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.
(409) விளக்கம்:

மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
(410) விளக்கம்:

அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவதுபோல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
(411) விளக்கம்:

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்.


செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
(412) விளக்கம்:

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
(413) விளக்கம்:

செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக்கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்.

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
(414) விளக்கம்:

தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெறவேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல்போலத் துணையாகும்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
(415) விளக்கம்:

நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல்போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
(416) விளக்கம்:

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.
(417) விளக்கம்:

நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
(418) விளக்கம்:

கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
(419) விளக்கம்:

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே. கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
(420) விளக்கம்:

கேள்வியாகிய அறிவுச் சுவையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்.


செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
(431) விளக்கம்:

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.


இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
(432) விளக்கம்:

ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்.

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
(433) விளக்கம்:

பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்.

குற்றமே காக்க பொருளாக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
(434) விளக்கம்:

தனக்கு முடிவைத்தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே, குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக்கொள்க.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
(435) விளக்கம்:

குற்றம் வரும் முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது,நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
(436) விளக்கம்:

தன் குற்றத்தையும் வராமல் நீக்கி, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்.

செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
(437) விளக்கம்:

செல்வம் பெற்றபோது அதனாலே செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.
(438) விளக்கம்:

செல்வத்தின் மேல் பற்றுக்கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
(439) விளக்கம்:

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களை ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
(440) விளக்கம்:

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்.
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
(441) விளக்கம்:

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அநிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொளல் வேண்டும்.


உற்றநோய் நீக்கி உறாஅமை ணிற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
(442) விளக்கம்:

நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டிலே துன்பம் வராதபடி காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ள வேண்டும்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
(443) விளக்கம்:

பெரியோரை விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக்கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெறும்பேறு ஆகும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
(444) விளக்கம்:

தன்னினும் பெரியாராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்துவருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
(445) விளக்கம்:

தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ள வேண்டும்.

தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
(446) விளக்கம்:

தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை.

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
(447) விளக்கம்:

இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
(448) விளக்கம்:

இடித்துச் சொல்லி திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாதபோதும், தானாகவே கெடுவான்.

முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.
(449) விளக்கம்:

முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை.

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
(450) விளக்கம்:

பலரோடும் பகைத்துக் கொள்வதைவிட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும்.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
(451) விளக்கம்:

பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள்.


நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.
(452) விளக்கம்:

நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும்.

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.
(453) விளக்கம்:

மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும்.

மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.
(454) விளக்கம்:

ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தையொட்டியதாகவே அறிவு உண்டாகும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
(455) விளக்கம்:

மனம் தூய்மையாதலும், செய்யும் தொழில் தூய்மையாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும்.

மனந்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனந்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
(456) விளக்கம்:

மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும்; சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை.

மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
(457) விளக்கம்:

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லா வகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.

மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
(458) விளக்கம்:

சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும்.

மனநலத்தின் ஆகும் மறுமை மற்றுஅஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.
(459) விளக்கம்:

மனத்தின் செம்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.

நல்லினத்தின் ஊங்கும் துணைஇல்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
(460) விளக்கம்:

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தைவிட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
(461) விளக்கம்:

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதியபின்னரே செய்ய வேண்டும்.


தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
(462) விளக்கம்:

தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக்கூடயது யாதொன்றுமே இல்லை.

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
(463) விளக்கம்:

வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.

தெளிவு இலதனைத் தொடங்கார் இழிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
(464) விளக்கம்:

தமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒருபோதும் தொடங்க மாட்டார்கள்.

வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.
(465) விளக்கம்:

ஒரு செயலைப்பற்றி எல்லா வகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
(466) விளக்கம்:

செய்யத் தகுந்தது அல்லாத ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும். செய்யத்தகுந்த செயலைச் செய்யாமையாலும் கெடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
(467) விளக்கம்:

நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; "துணிந்த பின்னர் எண்ணுவோம்" என்று எதையும் நினைப்பது குற்றமாகும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப் படும்.
(468) விளக்கம்:

செய்வதற்கு உரிய வழிகளிலே முயன்று செய்யப்படாத தொழிலானது, பலர் துணை நின்று பின்னர்க் காத்தாலும் கெட்டுப் போய்விடும்.

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்நின்று
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.
(469) விளக்கம்:

அவரவரது இயல்புகளைத் தெரிந்துகொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
(470) விளக்கம்:

உயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
(471) விளக்கம்:

செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்.


ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
(472) விளக்கம்:

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிங்கிச்
இடைக்கண் முரிந்தார் பலர்.
(473) விளக்கம்:

தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்துபோனவர்கள் உலகிற் பலராவர்.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
(474) விளக்கம்:

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனுமாகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவில் கெடுவான்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
(475) விளக்கம்:

மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.
(476) விளக்கம்:

மரத்தின் நுனிக் கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால், அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
(477) விளக்கம்:

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
(478) விளக்கம்:

வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
(479) விளக்கம்:

தன்னடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
(480) விளக்கம்:

தன்னடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும்.

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
(481) விளக்கம்:

தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை யாக்கும் கயிறு.
(482) விளக்கம்:

காலத்தோடு பொருத்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மைவிட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(483) விளக்கம்:

ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
(484) விளக்கம்:

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
(485) விளக்கம்:

உலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
(486) விளக்கம்:

ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர்மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக் கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
(487) விளக்கம்:

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
(488) விளக்கம்:

தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவு காலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
(489) விளக்கம்:

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
(490) விளக்கம்:

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து, காலம் வாய்த்த போதில், கொக்கு மீனைக் குத்தினாற்போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.
(491) விளக்கம்:

பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்ட பின் அல்லாமல், எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்; அவர் வலிமையை இகழாமலும் இருக்க வேண்டாம்.


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
(492) விளக்கம்:

மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
(493) விளக்கம்:

தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பார்.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
(494) விளக்கம்:

தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருக்கிச் செய்தாரானால், அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
(495) விளக்கம்:

ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரைவிட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
(496) விளக்கம்:

நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.
(497) விளக்கம்:

செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து, தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
(498) விளக்கம்:

சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
(499) விளக்கம்:

கடக்க ணிடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்.

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
(500) விளக்கம்:

போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும்.

No comments: