தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
(201) விளக்கம்:
தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்ச மாட்டார்கள் ; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்.
(202) விளக்கம்:
தீயசெயல்கள் பிறர்க்கும் தமக்கம் தீமை விளைவித்தால், தீய செயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்.
அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
(203) விளக்கம்:
தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
(204) விளக்கம்:
பிறனுக்கு கேடு செய்வதனைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது ; நினைத்தால் அப்படி நினைத்தவனுக்கு கேடு செய்ய அறமே நினைக்கும்.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.
(205) விளக்கம்:
'இவன் துணையிலன் ' என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும். செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்.
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டா தான்.
(206) விளக்கம்:
துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன். தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
(207) விளக்கம்:
எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்; தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று.
(208) விளக்கம்:
தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துள்ளற்க அடிஉறைந்து அற்று.
(209) விளக்கம்:
ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒரு போதுமே ஈடுபடாமல் இருப்பானாக.
அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்
தீவினை செய்யான் எனின்.
(210) விளக்கம்:
ஒருவன், தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.
(211) விளக்கம்:
மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே.
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
(212) விளக்கம்:
தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம், தக்கரவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.
புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
(213) விளக்கம்:
ஒப்புரவைரப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகதிலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.
(214) விளக்கம்:
'எவ்வுயிரும் ஒத்த தன்மையானது' என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன். ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
(215) விளக்கம்:
உலகினர் எல்லோரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவானுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
(216) விளக்கம்:
செல்வம் நல்ல பண்பு உடையவனிடம் சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
(217) விளக்கம்:
செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன்தரத் தவறாத மருந்து மரம் போல எப்போதும் பயன் தருவதாகும்.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
(218) விளக்கம்:
ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள் வசதி இல்லாத காலத்திலும் முடிந்த வரை உதவத் தளர மாட்டார்கள்.
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு.
(219) விளக்கம்:
ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்.
ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
(220) விளக்கம்:
ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும்.
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
(221) விளக்கம்:
வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை: பிறர்க்குத் தருவது எல்லாம் எதிர்ப் பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.
நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
(222) விளக்கம்:
நல்ல அறச்செயலுக்கே என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே: மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது.
இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
(223) விளக்கம்:
ஒருவன் வந்து, நான் யாதும் இல்லாதவன் என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
(224) விளக்கம்:
உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்.
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
(225) விளக்கம்:
பசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும். அதுவும், அப் பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்கப் பிற்பட்டதே ஆகும்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(226) விளக்கம்:
பலரோடும் பகுந்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையானதாகும்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
(227) விளக்கம்:
பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் பசி என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.
ஈந்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
(228) விளக்கம்:
தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள்,பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
(229) விளக்கம்:
தாம் முயன்று தேடி நிரப் பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலைவிட துன்பம் தருவதாகும்.
சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
(230) விளக்கம்:
சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை. பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
(231) விளக்கம்:
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுக்குப் புகழோடு வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் உயிருக்கு ஊதியம் என்பது வேறு யாதும் இலலை.
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
(232) விளக்கம்:
புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.
(233) விளக்கம்:
உயர்ந்த எல்லைவரை பரவிநிற்கும் புக<ழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது, அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேன் உலகு.
(234) விளக்கம்:
உலகத்தின் எல்லைவரை பரவிநிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது, அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.
நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
(235) விளக்கம்:
புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும். செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல் பிறருக்கு ஒரு போதும் கிடைக்காது.
தோன்றிற் புகழொடு தோன்றுக ஆஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(236) விளக்கம்:
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடு தான் தோன்ற வேண்டும், புகழ் இல்லாதவர் தோன்றுவதைவிடத் தோன்றாமல் போவதே நல்லது.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
(237) விளக்கம்:
தமக்கு புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காவோ?
வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.
(238) விளக்கம்:
தமக்குப்பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள்.
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
(239) விளக்கம்:
புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங்கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவிதில் குறைபாடு அடையும்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
(240) விளக்கம்:
வகை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர். புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர்.
அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
(241) விளக்கம்:
அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்: பொருள்களாகிய பிற வகைச் செயல்கள் எல்லாம் இழிந்தவரிடத்தில் உள்ளனவே.
நல்லற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.
(242) விளக்கம்:
நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
(243) விளக்கம்:
இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள பொருந்தியநெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
(244) விளக்கம்:
நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
(245) விளக்கம்:
அ-ருள் கொண்-ட-வ-ரா-க வாழ்-ப-வர்-க-ளுக்-கு -எந்-தத் துன்--ப-மு-மே இல்-லை; காற்-று உயிர் வழங்-கு--தலால் வா-ழும் வள-மா-ன -ப-ரி-ய உ-ல-க-மே இ-தற்-குச் சான்-று.
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
(246) விளக்கம்:
அருள்தலிலே, இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே. உறுதிப்பொருளை இழந்து தம் வாழக்கைக் குறிகோளையும் மறந்தவராவர்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
(247) விளக்கம்:
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழக்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லையாகும்.
பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
(248) விளக்கம்:
பொருள் இழந்தவர்ளும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள்: அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே: மீண்டும் அடைதல் அரிது.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
(249) விளக்கம்:
அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியோர்மேல் செல்லும் இடத்து.
(250) விளக்கம்:
தன்னைவிட மெலிவானர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
(251) விளக்கம்:
தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்?
பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
(252) விளக்கம்:
பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவருக்கு இல்லை. அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவருக்கு இல்லை.
படைகொண்டார் நெஞ்சம் போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
(253) விளக்கம்:
ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம். கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது.
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
(254) விளக்கம்:
கொல்லாமையே அருள் ஆகும்: ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை ; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும்.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊணுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
(255) விளக்கம்:
உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊணுண்ணாத இயல்பில்தான் உள்ளது. ஊன் உண்டால், நரகம் அவனை வெளியேவிட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.
தினல்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
(256) விளக்கம்:
புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உ.யிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.
(257) விளக்கம்:
புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உணர்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
(258) விளக்கம்:
பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்துவந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
(259) விளக்கம்:
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருநத்தல் மிகவும் நன்மையானதாகும்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
(260) விளக்கம்:
கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கை தொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.
(261) விளக்கம்:
தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிர்க்குத் தாம் துன்பஞ் செய்யாமிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
(262) விளக்கம்:
தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்: தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே.
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
(263) விளக்கம்:
துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உறவுகதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்.
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
(264) விளக்கம்:
பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்.
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
(265) விளக்கம்:
வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்.
தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு.
(266) விளக்கம்:
தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர். மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
(267) விளக்கம்:
சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்.
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.
(268) விளக்கம்:
தான் என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவ வலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.
கூற்றம் குதித்தாலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
(269) விளக்கம்:
தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றிகொள்வதற்கு முடியும்.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
(270) விளக்கம்:
உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே ஆகும்.
(271) விளக்கம்:
வஞ்சக மனத்தினது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்.
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தானறி குற்றப் படின்.
(272) விளக்கம்:
தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்திலேயும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத் தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?
வலியில் நிலைமையான் வல்லுருவன் பெற்றம்
புலியின்தோல் போர்த்தமேய்ந் தற்று.
(273) விளக்கம்:
மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு. புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
(274) விளக்கம்:
தவக் கோலத்திலே மறைந்து கொண்டு, தீய செயல்களைச் செய்தல், கொலை குறித்த வேடன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும்.
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்.
(275) விளக்கம்:
பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், என்ன செய்தோம்? என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும்.
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
(276) விளக்கம்:
நெஞ்சிலே ஆசையை விடாதரவர்களாய். வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்.
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
(277) விளக்கம்:
புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும் , உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குபோலக் கரியவரும் உள்ளனர்.
மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.
(278) விளக்கம்:
மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவர்.
கணைகொடிது யாழ்கொடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலாற் கொளல்.
(279) விளக்கம்:
நேரானாலும் அம்பு கொடுமை செய்வது: வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது: மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
(280) விளக்கம்:
உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வு தானே வரும். உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்வதும், நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
(281) விளக்கம்:
உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.
(282) விளக்கம்:
பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம் என்று, ஒருவன். தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவுக்கூடத் தீமையானதே.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(283) விளக்கம்:
களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல் எல்லாம் வந்தது போல விரைந்து ஒழிந்தும் விடும்.
களவின்கண் கன்றிய காதல் வினைவின்கண்
வீயா விழுமம் தரும்.
(284) விளக்கம்:
களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்.
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
(285) விளக்கம்:
பொருள் தேடுதலையே. நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையராதல்.சான்றோரிடம் இல்லை.
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
(286) விளக்கம்:
களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
(287) விளக்கம்:
களவு எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது. அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒரு போதும் இல்லை யாகும்.
அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
(288) விளக்கம்:
அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே அறம் நிற்பது போல, டுளவுத் தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே வஞ்சகம் எப்போதும் நிலைத்திருக்கும்.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
(289) விளக்கம்:
களவு அல்லாத பிற நல்ல ணியற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவுகடந்த செலவுகளைச் செய்து அக் களவாலே அழிவார்கள்.
கள்வர்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேன் உலகு.
(290) விளக்கம்:
களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும், காலமும் தவறிப் போகும்: களவு செய்யாதவர்களுக்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
(291) விளக்கம்:
வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
(292) விளக்கம்:
குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும்கூட வாய்ம்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும்.
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
(293) விளக்கம்:
ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாகதிருப்பானாக: அப்படி பொய்த்தபின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும்.
உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
(294) விளக்கம்:
உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
(295) விளக்கம்:
மனத்தொடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன், தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான்.
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.
(296) விளக்கம்:
பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை: அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
(297) விளக்கம்:
பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்து வந்தால், பிற அறச் செயல்கள் ஏதும் செய்யாத போதிலும்கூட, அது நன்மையைத் தரும்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
(298) விளக்கம்:
புறவுடலின் தூய்மை நீரால் ஏற்படும், உள்ளத்தில் தூய்மை அவனது வாய்மையால் (உண்மை பேசுவதால்) ஏற்படும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(299) விளக்கம்:
புற இருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது: சான்றோர்க்கு பொய்யாமையாகிய விளக்கே அவற்றிலும் சிறந்த விளக்காகத் தோன்றும்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
(300) விளக்கம்:
யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையயாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை.
No comments:
Post a Comment