Tuesday, December 4, 2007

திருக்குறள் என்னும் அறிவு அமுதம்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
(101) விளக்கம்:

தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ் வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.


காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
(102) விளக்கம்:

காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
(103) விளக்கம்:

பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும்விட அளவினால் மிகப் பெரியதாகும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்.
(104) விளக்கம்:

உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.

உதவி வரைந்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
(105) விளக்கம்:

உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று: அது உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயர் நட்பு.
(106) விளக்கம்:

மனமாக இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது. துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
(107) விளக்கம்:

தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழு பிறப்பிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் நன்றியுடையோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
(108) விளக்கம்:

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது. நன்மை அல்லாத விஷயங்களை அன்றைக்கே மறந்து விடுவது நல்லதாகும்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
(109) விளக்கம்:

ஒருவர் நம்மைக் கொன்றாற்போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
(110) விளக்கம்:

எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.
தகுதி எனவொன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
(111) விளக்கம்:

ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடை பெறுமானால் , 'தகுதி' என்று கூறப்படும் நடுவு நிலைமையும் நல்லதே ஆகும்.


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
(112) விளக்கம்:

செம்மை உடையவனின் பொருள் வளமையானது. இடையிலே அழிந்து போகாமல்,அவன் வழியினார்க்கும் உறுதியாக நன்மை தரும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
(113) விளக்கம்:

நன்மையே தருவது என்றாலும் நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கிவிட வேண்டும்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
(114) விளக்கம்:

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பவற்றால் காணப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
(115) விளக்கம்:

பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கொணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
(116) விளக்கம்:

தன் நெஞ்சமானது நடுவு நிலையிலிருந்து விலகி, தவறு செய்பவன், யான் இதனால் கெடுவேன் என்பதனையும் அறிந்து கொள்வானாக.

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
(117) விளக்கம்:

நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
(118) விளக்கம்:

தன்னைச் சமனாகச் செய்துகொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
(119) விளக்கம்:

உள்ளத்திலே கோணுதலற்ற பண்பை ணிடிவாகப் பெற்றிருந்ததால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவுந் தம்போற் செயின்.
(120) விளக்கம்:

பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய் த்து விடும்.
(121) விளக்கம்:

அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும். அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்.


காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு.
(122) விளக்கம்:

அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக்காத்து வருக: உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
(123) விளக்கம்:

அறியவேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
(124) விளக்கம்:

தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே மாணப் பெரிது.
(125) விளக்கம்:

பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும். அவருள்ளும் செல்வர்க்கு அதுவும் ஒரு செல்வத்தைப் போன்ற சிறப்பினதே ஆகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து .
(126) விளக்கம்:

ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
(127) விளக்கம்:

எவற்றைக் காக்காதவராயினும் தம் நாவைத் தவறாமல் காக்க வேண்டும். காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
(128) விளக்கம்:

தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையுமே இல்லாமற் போய்விடும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
(129) விளக்கம்:

தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறி விடும். ஆனால் நாவினாலே சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
(130) விளக்கம்:

சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
(131) விளக்கம்:

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
(132) விளக்கம்:

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவும்ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும்,ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
(133) விளக்கம்:

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிபிறப்பின் தன்மை ; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
(134) விளக்கம்:

கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு அவன் ஒழுக்கம் குன்றினால்கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
(135) விளக்கம்:

பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழக்கையிலும் உயர்வு இல்லை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் பாடுபாக் கறிந்து.
(136) விளக்கம்:

மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே பிறழ மாட்டார்கள்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
(137) விளக்கம்:

ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத்தகாத பழியை அடைவார்கள்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
(138) விளக்கம்:

நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும் ; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்.

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
(139) விளக்கம்:

தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலர் தார்.
(140) விளக்கம்:

உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களை கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
(141) விளக்கம்:

பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை.


அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல்.
(142) விளக்கம்:

நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்.
(143) விளக்கம்:

சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியவர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
(144) விளக்கம்:

தினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்.

எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
(145) விளக்கம்:

இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்.

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
(146) விளக்கம்:

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
(147) விளக்கம்:

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவனின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றே ஆன்ற ஒழுக்கு.
(148) விளக்கம்:

பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று ; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.
(149) விளக்கம்:

அச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே 'நன்மைக்கு உரியவர் யார்?' என்றால், பிறருக்கு உரியவனின் தோளைத் தழுவாதவரே ஆவர்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
(150) விளக்கம்:

அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதவற்றையே செய்தாலும். பிறனுக்கு உரியவனின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
(151) விளக்கம்:

தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும்.


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
(152) விளக்கம்:

அளவுகடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனினும் நன்மையாகும்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
(153) விளக்கம்:

வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
(154) விளக்கம்:

நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கொள்ள வேண்டும்.

ஒறுத்தாரை ஒன்றாக வைப்பாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
(155) விளக்கம்:

தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார். ஆனால், பொறுத்தவர்களைப் பொன் போல் பொதித்து வைப்பார்கள்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
(156) விளக்கம்:

தீங்கு செய்தவர்களைத் தண்டித்தவர்களுக்கு அனறு ஒரு நாளே இன்பம் ; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும்வரை புகழ் உண்டு.

திறனல்ல தற்பிற் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
(157) விளக்கம்:

தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நன்று.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
(158) விளக்கம்:

செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்றுவிட வேண்டும்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்.
(159) விளக்கம்:

எல்லைமீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையானர் ஆவர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
(160) விளக்கம்:

உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலேதான் பெரியவர்ஆவர்.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
(161) விளக்கம்:

தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே ஒருவன், தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
(162) விளக்கம்:

ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்ததது எதுவும் இல்லை.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
(163) விளக்கம்:

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
(164) விளக்கம்:

'பொறாமை' என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்யமாட்டார்கள்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
(165) விளக்கம்:

பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம் ;அதுவே போதும் ; பகைவர் கேடு, செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
(166) விளக்கம்:

இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்தும் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
(167) விளக்கம்:

பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
(168) விளக்கம்:

பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய 'பாவி', ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்தி விடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
(169) விளக்கம்:

பொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமையற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும நினைக்கப்படும்.

அழுக்காறு அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
(170) விளக்கம்:

உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை ; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
(171) விளக்கம்:

நடுவுநிலைமை இல்லாமல், பிறந்து நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப்போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.


படுபயன் வெஃகி வழிபடுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
(172) விளக்கம்:

நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான சொல்களைச் செய்யவே மாட்டார்கள்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
(173) விளக்கம்:

நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்ப மாட்டார்கள்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
(174) விளக்கம்:

ஐம்புலன்களையும் வென்ற குறையில்லாத அறிவாளர்கள், 'யாம் பொருளில்லாதேம்' என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
(175) விளக்கம்:

ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
(176) விளக்கம்:

அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன்,பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய் விடுவான்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.
(177) விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்பவேண்டாம்; செயல் அளவில் அதன்பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
(178) விளக்கம்:

ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
(179) விளக்கம்:

அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை,திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்.

இறவீனும் எண்ணாது வெஃகின் விறவீனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
(180) விளக்கம்:

வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
(181) விளக்கம்:

அறத்தைப்பற்றி வாயாலும், சொல்லாதவனாய் ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும்,' அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன் ' என்பது இனிதாகும்.


அறனழீ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
(182) விளக்கம்:

அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
(183) விளக்கம்:

பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
(184) விளக்கம்:

நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக ; நேரில் இல்லாதபோது, பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால காணப் படும்.
(185) விளக்கம்:

அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதால் அந்த இழிசெயலால் தெளிவாக அறியலாகும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன் தெரிந்து கூறப் படும்.
(186) விளக்கம்:

பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுக் குள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
(187) விளக்கம்:

'மகிழ்ச்சியாகப் பேசி நட்பு கொள்ளுதல் நன்மை' என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்.

துள்ளியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
(188) விளக்கம்:

நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
(189) விளக்கம்:

ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறதோ?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
(190) விளக்கம்:

அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
(191) விளக்கம்:

பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாய்ப் பேசப்படுவான்.


பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
(192) விளக்கம்:

பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதைவிடத் தீமையானது ஆகும்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
(193) விளக்கம்:

பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, 'அவன் நல்ல பண்பில்லாதவன் 'என்பதை உலகுக்கு அறிவிக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து.
(194) விளக்கம்:

பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையையும் தராததோடு உள்ள நன்மையையும் போக்கிவிடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.
(195) விளக்கம்:

நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
(196) விளக்கம்:

பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை ,' மனிதன்' என்றே சொல்லக் கூடாது ; மக்களுள், 'பதர் ' என்றே கொள்ளல் வேண்டும்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
நபயனில சொல்லாமை நன்று.
(197) விளக்கம்:

நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம். பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
(198) விளக்கம்:

அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயனில்லாத சொற்களை ஒரு போதுமே சொல்ல மாட்டார்கள்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
பெரும்பயன் இல்லாத சொல்.
(199) விளக்கம்:

மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும்கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
(200) விளக்கம்:

சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக ; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்.

No comments: