பழைமை எனப்படுவது யாதெனில் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
(801) விளக்கம்:
"பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது?" என்றால் அது உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்து வரும் நல்ல நட்பு ஆகும்.
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
(802) விளக்கம்:
நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும். அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை.
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
(803) விளக்கம்:
தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தம் நண்பரிடத்திலும் அமைந்திரா விட்டால் அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்?
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
(804) விளக்கம்:
தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக ஒரு செயலைச் செய்து விட்டாலும், அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே நல்ல நண்பர்கள்.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
(805) விளக்கம்:
நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால் அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது. நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்.
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
(806) விளக்கம்:
அறிவுடையவர் தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள்.
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
(807) விளக்கம்:
அன்பாலே பொருந்திய நட்பை உடையவர்கள், அழிவு வரக்கூடிய ஒரு செயலைச் செய்தாலும், அவர் மீது நாம் கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது.
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
(808) விளக்கம்:
நண்பரின் குற்றம், குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளில் குறையாகவே தோன்றும்.
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
(809) விளக்கம்:
கெடுதல் இல்லாத வழியோடு தொடர்ந்து பழகிவந்த நட்பினை எதனாலும் கைவிடாத பண்பினரை உலகத்தார் எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள்.
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
(810) விளக்கம்:
பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப்படுவார்கள்.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
(811) விளக்கம்:
நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது நாளுக்கு நாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது.
உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
(812) விளக்கம்:
செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும் இழந்தாலும் ஒன்று தான்.
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
(813) விளக்கம்:
தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே.
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
(814) விளக்கம்:
போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப் போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது.
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
(815) விளக்கம்:
நமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலை விட அடையாததே நன்மையாகும்.
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்.
(816) விளக்கம்:
பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்.
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.
(817) விளக்கம்:
வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்.
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
(818) விளக்கம்:
நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
(819) விளக்கம்:
நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
(820) விளக்கம்:
வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும் நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
(821) விளக்கம்:
உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரின் நட்பானது நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.
இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
(822) விளக்கம்:
நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலை மகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
(823) விளக்கம்:
பலவான நல்ல அற நூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
(824) விளக்கம்:
முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டுவிட வேண்டும்.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று.
(825) விளக்கம்:
மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை எந்த ஒரு வகையாலும் அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
(826) விளக்கம்:
நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுக்களைச் சொன்னாலும் நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்து விடலாம்.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
(827) விளக்கம்:
நம்மிடம் பேசும் பேவில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே. இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமை தரும் என்று தள்ளிவிட வேண்டும்.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
(828) விளக்கம்:
நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும். பகைவர் அழுது வடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
(829) விளக்கம்:
வெளிப்பட மிகுதியாக நட்புச் செய்து உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்து விடல் வேண்டும்.
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
(830) விளக்கம்:
பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து உள்ளத்திலே போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
(831) விளக்கம்:
"பேதைமை" என்பதன் தன்மை என்னவென்றால், ஒன்றைச் செய்யும்போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.
(832) விளக்கம்:
பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
(833) விளக்கம்:
பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்பு கொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும் பேதையரது தொழிலாகும்.
ஓதி உணர்ந்தும் பிறர்குரைத்தும் தான்அடங்காப்
பேதையிற் பேதையர் இல்.
(834) விளக்கம்:
நூல்களை முறையாகப் படித்து உணர்ந்தும், பிறர்க்கும் அதை சொல்லி வந்தும், தன் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும் பெரிய பேதையர் உலகில் எவரும் இல்லை.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
(835) விளக்கம்:
இந்தப் பிறப்பில் பேதமைச் செயல்களையே செய்து வரும் பேதை, தொடர்ந்து வரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
(836) விளக்கம்:
ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
(837) விளக்கம்:
பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
(838) விளக்கம்:
பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழி தவறி நடப்பான்.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.
(839) விளக்கம்:
ஒரு வகையில் பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும். அது தான் அவனைப் பிரிந்தவிடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாதது.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
(840) விளக்கம்:
சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு.
(841) விளக்கம்:
அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை. பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
(842) விளக்கம்:
அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
(843) விளக்கம்:
அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்.
வெண்மை எனப்படுவது யாதெனில் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
(844) விளக்கம்:
அறியாமை என்று சொல்லப்படுவது என்னவென்றால், அறிவில்லாதவனும் "தான் அறிவுடையவன்" என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்.
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
(845) விளக்கம்:
தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
(846) விளக்கம்:
தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாத போது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
(847) விளக்கம்:
அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத் தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
(848) விளக்கம்:
அறிவுடையோர் "இன்னின்னபடி செய்க" என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.
காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
(849) விளக்கம்:
தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
(850) விளக்கம்:
உலகத்தார் "உண்டு" என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே "இல்லை" என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கிவைக்கப்படுவான்.
இகலென்ப எல்லா உயர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்.
(851) விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், இகல் என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
(852) விளக்கம்:
தம்முடன் கூடாமையை நினைத்து ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது.
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
(853) விளக்கம்:
"மாறுபாடு" என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கிவிட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை அதுவே தரும்.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
(854) விளக்கம்:
"மாறுபாடு" என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.
(855) விளக்கம்:
தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர் எவருமே இலர்.
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணிந்து.
(856) விளக்கம்:
"பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது" என்று அதனைச் செய்பவனது உயிர் வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்.
மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகன்மேவல்
இன்னா அறிவி னவர்.
(857) விளக்கம்:
இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூல்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு.
(858) விளக்கம்:
தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும். அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும்.
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
(859) விளக்கம்:
தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான். தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்.
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
(860) விளக்கம்:
"மாறுபாடு" என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும். நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும்.
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
(861) விளக்கம்:
தம்மைவிட வலியவருக்கு பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிட வேண்டும். தம்மினும் மெலியவருக்கு பகையாமல் இருப்பதை விடாமல் கொள்ள வேண்டும்.
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலாள் துப்பு.
(862) விளக்கம்:
தம்மைவிட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும். தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும்.
அஞ்சும அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
(863) விளக்கம்:
அஞ்சுபவன், அறிய வேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
(864) விளக்கம்:
நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
(865) விளக்கம்:
நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன் ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்.
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
(866) விளக்கம்:
தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமாக சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
(867) விளக்கம்:
தொடங்கும் போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இளனிலனாம் ஏமாப்பு உடைத்து.
(868) விளக்கம்:
நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான். அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும்.
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
(869) விளக்கம்:
நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும்.
கல்லான் வெகுளுஞ் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.
(870) விளக்கம்:
நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறு பொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது.
பகையெனும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
(871) விளக்கம்:
"பகை" என்று கூறப்படும் தீமை தருவதனை ஒருவன் விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது. இதுவே நீதி நூல்களின் முடிந்த முடிபாகும்.
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
(872) விளக்கம்:
வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது.
ஏழுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
(873) விளக்கம்:
தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
(874) விளக்கம்:
தான் வேண்டும்போது, தன் பகைவருள் சிலரைப் பிரிந்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித் திறனுடைய அரசனின் பெருமையினுள்ளே இவ்வுலகமே அடங்கி விடும்.
தன்துணை யின்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றி னொன்று.
(875) விளக்கம்:
"தனக்கு ஒரு துணை இல்லை, பகையோ எனில் இரண்டு" என்னும்போது அதனுள் ஒன்றை அப்போதைக்கு தனக்கு இனிய துணையாகுமாறு செய்துகொள்ளல் வேண்டும்.
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
(876) விளக்கம்:
பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து அவரைக் கூடாதும் நீக்காதும் விட்டு வைக்க வேண்டும்.
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.
(877) விளக்கம்:
தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம். வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
(878) விளக்கம்:
தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.
இளைதாக முன்மரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.
(879) விளக்கம்:
களைய வேண்டிய முன்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக. முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால் அது களைபவர் கையினைத் தான் களைந்து விடும்.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
(880) விளக்கம்:
பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியான அதனைச் செய்யாத அரசர் பின்னர் உயிரோடு இருப்பதற்கும் உரியவர் ஆகார்.
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
(881) விளக்கம்:
நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும். தழுவ வேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் ணிதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்.
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
(882) விளக்கம்:
வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம். சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே அஞ்ச வேண்டும்.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
(883) விளக்கம்:
உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்தபோது அவர்கள் கெடுதல் செய்வார்கள்.
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
(884) விளக்கம்:
உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும். இல்லையானால், அது சற்றும் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும்.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
(885) விளக்கம்:
புறத்தே உறவுமுறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அது அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்.
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
(886) விளக்கம்:
தனக்கு உட்பட்டவரிடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
(887) விளக்கம்:
செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள்.
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை யுற்ற குடி.
(888) விளக்கம்:
முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
(889) விளக்கம்:
ஒருவனது உட்பகை அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவுபோன்று சிறிதானது என்றாலும் அதனாலும் அவன் பெருமை எல்லாம் பிற்காலத்தில் கெட்டுவிடும்.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
(890) விளக்கம்:
மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்.
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
(891) விளக்கம்:
மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது. அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும்.
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.
(892) விளக்கம்:
பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால் அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்து விடும்.
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
(893) விளக்கம்:
தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதிநூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
(894) விளக்கம்:
மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக் கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு கைகாட்டி அழைப்பதைப் போலாகும்.
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
(895) விளக்கம்:
பகைவருக்கு வெய்யதான வலி மிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும் எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள்.
எரியாற் சுடப்பனும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
(896) விளக்கம்:
காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப் பட்டாலும், ஒருவழியாக உயிர் பிழைத்து விடுவான். பெரியாரைப் பிழைத்து நடந்தவனுக்கு உய்வே கிடையாது.
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
(897) விளக்கம்:
சாபமிடுதலும் அருள் செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால் பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும் பெரும்பொருளும் அழிந்து விடும்.
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் செறின்.
(898) விளக்கம்:
குன்றுபோலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெட வேண்டும் என்ற நினைப்பார்களானால், தம் குடியோடு நிலை பெற்றார் போன்ற பெருஞ்செல்வரும் மாய்வார்கள்.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
(899) விளக்கம்:
உயர்ந்த விரதவாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும் அப்போதே அழிந்து போய்விடுவான்.
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
(900) விளக்கம்:
மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப் பெரிய சார்பு உடையவரானாலும் உய்ய மாட்டார்கள். அப்போதே அழிவார்கள்.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
(901) விளக்கம்:
தம் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார். பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுக்கும் பொருளும் அதுவே.
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுந் தரும்.
(902) விளக்கம்:
தன் ஆண்மையைப் பாணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
(903) விளக்கம்:
தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அது இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில் எப்போதும் நாணத்தையே தரும்.
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.
(904) விளக்கம்:
தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப் பயனை இல்லாத ஒருவனுக்கு செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும் அது நல்லோரால் மதிக்கப்படாது.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
(905) விளக்கம்:
தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
(906) விளக்கம்:
தம் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகின்றவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும் ஆண்மையற்றவரே.
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
(907) விளக்கம்:
தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும்.
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
(908) விளக்கம்:
தம் மனையாள் விரும்பியபடியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்க மாட்டார்கள். மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள்.
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.
(909) விளக்கம்:
அறச் செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா.
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
(910) விளக்கம்:
கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
(911) விளக்கம்:
அன்பால் விரும்பாமல் அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர் துன்பம் தரும்.
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
(912) விளக்கம்:
ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
(913) விளக்கம்:
கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும்.
பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
(914) விளக்கம்:
இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொது மகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார்.
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
(915) விளக்கம்:
இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசை காட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்ட மாட்டார்கள்.
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
(916) விளக்கம்:
தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்ட மாட்டார்கள்.
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
(917) விளக்கம்:
நெஞ்சிலே பொருள் மேல் ஆசை கொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
(918) விளக்கம்:
வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ்வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, "அணங்கு தாக்கு" என்று சொல்வார்கள்.
வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
(919) விளக்கம்:
உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
(920) விளக்கம்:
எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிர், கள், சூது என்னும் மூன்று தொடர்புகளும் திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும்.
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
(921) விளக்கம்:
கள்ளின்மேல் ஆசைகொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார். தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்.
உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
(922) விளக்கம்:
அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக. நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக.
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
(923) விளக்கம்:
எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும். அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்.
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
(924) விளக்கம்:
"கள்" என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, "நாண்" என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
(925) விளக்கம்:
தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும்.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
(926) விளக்கம்:
உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்.
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
(927) விளக்கம்:
கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப்படுவர்.
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
(928) விளக்கம்:
கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, "யான் உண்டு அறியேன்" என்று பொய் கூறுவதைக் கைவிடுக.
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
(929) விளக்கம்:
கள்ளுண்டு களித்தவனைக் காட்டி "இஃது நினக்கும் ஆகாது" என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும்.
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
(930) விளக்கம்:
கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிகனைக் காண்பான் அல்லவோ? அப்பக் காணும்போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
(931) விளக்கம்:
தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம். அவ்வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற் போன்றதே.
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
(932) விளக்கம்:
பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
(933) விளக்கம்:
உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்து விடும்.
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
(934) விளக்கம்:
தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக் கூடியது வேறு எதுவும் இல்லை.
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
(935) விளக்கம்:
முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், கவற்றினையும், அது ஆடும் களத்தினையும், கைத்திறனையும் மேற்கொண்டு விடாதவரே.
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
(936) விளக்கம்:
சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்.
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
(937) விளக்கம்:
நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்து விடும்.
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
(938) விளக்கம்:
பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.
உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
(939) விளக்கம்:
சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்.
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
(940) விளக்கம்:
இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
(941) விளக்கம்:
ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
(942) விளக்கம்:
முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு "மருந்து" என்னும் எதுவுமே வேண்டாம்.
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
(943) விளக்கம்:
முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும். அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி.
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
(944) விளக்கம்:
முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச் செய்யாத உணவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும்.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
(945) விளக்கம்:
உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
(946) விளக்கம்:
அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல், அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
(947) விளக்கம்:
பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.
நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
(948) விளக்கம்:
குணங்குன்றிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
(949) விளக்கம்:
மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
(950) விளக்கம்:
பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்.
இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
(951) விளக்கம்:
செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
(952) விளக்கம்:
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒருபோதுமே தவறமாட்டார்கள்.
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
(953) விளக்கம்:
எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
(954) விளக்கம்:
பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
(955) விளக்கம்:
தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கியபோதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்.
சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்.
(956) விளக்கம்:
"வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம்" என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்ய மாட்டார்கள்.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
(957) விளக்கம்:
உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும்.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
(958) விளக்கம்:
குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக்குடிப்பிறப்பு உடையவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்.
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.
(959) விளக்கம்:
நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும். அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச் சொற்கள் எடுத்துக் காட்டும்.
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
(960) விளக்கம்:
ஒருவன் தனக்கு நன்மைகளை விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும். குலனுடைமையை விரும்பினால் பணிவோடு நடத்தல் வேண்டும்.
இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்.
(961) விளக்கம்:
மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
(962) விளக்கம்:
தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்யமாட்டார்கள்.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
(963) விளக்கம்:
உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும். செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
(964) விளக்கம்:
நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையை விட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.
(965) விளக்கம்:
குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்.
புகழின்றால் புத்தணோட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
(966) விளக்கம்:
தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது, மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது. அதனால் என்ன பயன்?
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
(967) விளக்கம்:
தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர் வாழ்தலைவிட இறந்தவன் என்று சொல்லப்படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.
மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.
(968) விளக்கம்:
தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல் மானம் விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பணிக்கு ஏற்ற மருந்தாகுமோ
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
(969) விளக்கம்:
தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.
இனிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
(970) விளக்கம்:
தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிரை விட்டுவிட்ட மானமுள்ளவரது புகழ் வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்.
ஒளியொருவற்கு உள்ள வெறுக்கை இளியொருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
(971) விளக்கம்:
ஒருவனுக்குப் பெருமை, "பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்" என்னும் மனவூக்கமே. இழிவாவது, "அதனைச் செய்யாமலே உயிர்வாழ்வேன்" என்று நினைப்பதாகும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(972) விளக்கம்:
எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே. தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒருபோதும் ஒத்திருப்பதில்லை.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
(973) விளக்கம்:
செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார். அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
(974) விளக்கம்:
கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும் தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும்.
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
(975) விளக்கம்:
பெருமை உடையவர்கள், தாம் வறுமையானபோதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்துமுடிக்கும் வலிமை கொண்டவராவர்.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
(976) விளக்கம்:
"இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்" என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒருபோதும் உண்டாகாது.
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.
(977) விளக்கம்:
தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிறியவர்களித்தேயும் சேருமானால், தகுதியைவிட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும்.
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
(978) விளக்கம்:
பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள். மற்றைச் சிறுமை உடையவரோ எப்போதும் தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள்.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
(979) விளக்கம்:
பெருமைக் குணம் ஆவது, காரணம் உள்ளபோதும் தருக்கின்றி அமைந்திருத்தல், சிறுமைக் குணமாவது பெருமை அற்றபோதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
(980) விளக்கம்:
பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள். சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்.
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
(981) விளக்கம்:
"நமக்கு இது தகுவது" என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்.
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று.
(982) விளக்கம்:
சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே. அது ஒழிந்த பிற நலன்கள் எல்லாம் எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் பூன்றிய தூண்.
(983) விளக்கம்:
அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும்.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
(984) விளக்கம்:
"தவம்" ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது. சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்தது.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
(985) விளக்கம்:
ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டுக் கொள்ளுதல். சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே.
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
(986) விளக்கம்:
சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.
இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
(987) விளக்கம்:
தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், "சால்பு" என்று சிறப்பாகக் கொள்ளப்படுவதுதான் என்ன பயனை உடையதாகுமோ?
இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
(988) விளக்கம்:
"சால்பு உடைமை" என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார்.
(989) விளக்கம்:
சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தபோதும், தாம் நிலை திரிய மாட்டார்கள்.
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
(990) விளக்கம்:
பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்.
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(991) விளக்கம்:
எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு, பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
(992) விளக்கம்:
பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும் ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
(993) விளக்கம்:
உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது. செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்.
நயனோடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு.
(994) விளக்கம்:
நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள்.
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
(995) விளக்கம்:
தன்னை இகழ்தல் விளையாட்டின்போதும் துன்பமானது. ஆகவே, பாடு அறிவாரிடத்து பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும்.
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
(996) விளக்கம்:
பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது. அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
(997) விளக்கம்:
நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.
(998) விளக்கம்:
தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும்.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(999) விளக்கம்:
பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழமாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(1000) விளக்கம்:
பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ்செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல்போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.
(1001) விளக்கம்:
வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.
No comments:
Post a Comment